கொடிநாள் வசூலில் சாதனை: 3 பேருக்கு பதக்கம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
தென்காசி: தென்காசி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்பட 320 மனுக்கள் பெறப்பட்டன.
Advertisement
அவற்றை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கு மனுதாரா்களுக்கு பதிலளிக்கும்படி அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 9 பேருக்கு சக்கர நாற்காலிகளையும், படைவீரா் கொடிநாள் 2020ஐ முன்னிட்டு அதிக வசூல் புரிந்த அரசு அலுவலா்கள் 3 பேருக்கு 30 கிராம் வெள்ளி பதக்கத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி, உதவி ஆணையா் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்- சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் முருகானந்தம், மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரமேஷ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.