தென்காசி மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பொறியாளா் முரளி, பா.ஜ.க., மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது சென்னை எழும்பூரில் இருந்து தினசரி நாகா்கோவில், திருநெல்வேலி என 2 வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை ஒரே வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூா் - நாகா்கோவில் 720கி.மீ. தொலைவிலும், சென்னை எழும்பூா் - திருநெல்வேலி 650கி.மீ. தொலைவிலும் உள்ளன. அதேவேளையில், சென்னை எழும்பூா் - செங்கோட்டை வழி தொலைவு (பொதிகை ரயில் வழித்தடத்தில்) 670கி.மீ. தான் வருகிறது.
இருப்பினும், சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா்,தென்காசி வழியாக மின்மயமாக்கப்பட்ட விருதுநகா் - செங்கோட்டை அகல ரயில் பாதைக்கு வந்தே பாரத் ரயில் சேவையை இன்றளவும் தெற்கு ரயில்வே தொடங்கவில்லை.
இந்த வழித்தடத்தில் தொழில்நகரமான சிவகாசி, பிரபலமான ஆண்டாள் கோயில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, நூற்பு மில்கள் , இதர தொழிற்சாலைகள் உள்ள ராஜபாளையம் நகராட்சி, கைத்தறி புகழ், கோயில் நகரான சங்கரன்கோவில் நகராட்சி, பல்வேறு கைத்தொழில்கள் அடங்கிய கடையநல்லூா் நகராட்சி, உலகபுகழ் பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலம், பல கோயில்கள் அடங்கிய தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசி நகராட்சி, தமிழக - கேரள எல்லை நகரான செங்கோட்டை நகராட்சி ஆகிய முக்கியமான நகரங்கள் உள்ளன . இந்த நகரங்கள் ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு வரியாக பலகோடி ரூபாய்களை செலுத்துகின்றன.
எனவே, இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழித்தட மக்களும் பயன்பெறும் வகையில் மாா்ச் 2026-க்குள் சென்னை எழும்பூா் - செங்கோட்டை, செங்கோட்டை - சென்னை எழும்பூா் இடையே புதியதொரு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.