சீரமைக்கப்படுமா தொட்டியான்குளம்? உபரி நிலத்தில் பஸ் நிலையம், பள்ளி நிறுவ யோசனை
ஆலங்குளம், ஜூன் 4: திருநெல்வேலி-தென்காசி சாலையில் உள்ள ஆலங்குளத்தின் கிழக்குப் பகுதியில், பிரதான சாலையின் ஓரத்திலே அமைந்துள்ள தொட்டியான்குளத்தைப் பராமரிக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர்க
ஆலங்குளம், ஜூன் 4: திருநெல்வேலி-தென்காசி சாலையில் உள்ள ஆலங்குளத்தின் கிழக்குப் பகுதியில், பிரதான சாலையின் ஓரத்திலே அமைந்துள்ள தொட்டியான்குளத்தைப் பராமரிக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இக் குளம் 88.38 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால், குளத்தின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய நிலங்களோ 68. 39 ஏக்கர்தான்.
பராமரிப்பின்றி முள்புதர்கள் நிறைந்தும், சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ள இக் குளத்தைத் தூர்வாரியே அரை நூற்றாண்டுக்கு மேல் இருக்கும் என்கின்றனர் இங்குள்ள விவசாயிகள். இதனால், இக் குளத்தால் பெரிய அளவில் பயன்பாடு இல்லாமல் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசு அனுமதியுடன் ஓடு தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று குளத்து மணலை வெட்டி அள்ளிச்சென்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவே அள்ளிச்சென்றது. அதனால், குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய அளவில் உள்ளது. மற்ற பகுதியில் அதிக மழை பெய்தாலும் கூட தண்ணீர் தேங்குவதில்லை.
முறையான பராமரிப்பு இல்லாததாலும், அதிகமான இடம் பயன்பாடு இல்லாமல் தரிசுபோல உள்ளதாலும், வரும் காலங்களில் இக் குளத்துப் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பாளர்கள் கைவசம் செல்லும் சூழல் உருவாகி வருகிறது.
இது தவிர்க்கப்பட வேண்டும் என்றால், குளத்தை உடனடியாக தூர்வார அரசு முன் வர வேண்டும்.
தூர்வாரப்படும்போது குறைந்த பரப்பளவிலே அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். பாசன வசதியும் விவசாயிகளுக்கு உபரியாக இருக்கும்.
நீர்நிலைக்காக தூர்வாரப்படும் பகுதிகள் போக எஞ்சிய பல ஏக்கர் நிலத்தை, அரசின் நலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்ற பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்த இடங்களில் கீழ்க்கண்டவற்றை அமைக்கும் பட்சத்தில், ஆலங்குளம் மேலும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
போக்குவரத்துக் கழகப் பணிமனை: ஆலங்குளத்தில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பணிமனை அமைத்து, இப் பகுதி கிராமங்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியும், சிறப்பான சேவையும் செய்து தர வேண்டும் என இப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு அதற்கான அனுமதி வழங்கி, குளத்துப் பகுதியில் பேக்குவரத்துக் கழகப் பணிமனை அமைக்கலாம்.
புறநகர் பஸ் நிலையம்: ஆலங்குளம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நகரம் என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுவும் காலை, மாலை நேரங்களிலும், விடுமுறை தினங்களிலும், சுப தினங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது.
அதற்கு ஏற்ற அளவில் பஸ் நிலையம் பெரிய அளவில் இல்லை. இருக்கும் பகுதிகளும் பெரும் எண்ணிக்கையிலான கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க குளத்துப் பகுதியில் பஸ் நிலையம் அமைத்து, புறநகர் பஸ்கள் நின்று செல்லும் வகையிலும், ஏற்கெனவே உள்ள பஸ் நிலையத்தில் நகர, மினி, தனியார் பஸ்கள் நின்று செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யலாம்.
நீதிமன்றம்: ஆலங்குளத்தில் விரைவில் நீதிமன்றம் அமைக்க ஏற்பாடு செய்வதாக மாநில தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் கூறியிருந்தார்.
அதன்படி நீதிமன்றம் அமைய அரசு ஆணை கிடைத்தால், இக் குளத்துப் பகுதியில் இடம் ஒதுக்கி நீதிமன்றம் அமைக்கலாம்.
ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால், பள்ளியிலோ போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. கட்டடங்களும் குறுகிய இடத்துக்குள் உள்ளதால் மிக நெருக்கடியாகவே உள்ளது. மேலும் கல்வித் தரமும் பாதிக்கப்படுகிறது.
இவற்றைக் கருத்தில் கொண்டு ஆலங்குளத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. அப்படி மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைக்க வாய்ப்புவரும் பட்சத்தில் இக் குளத்துப் பகுதியிலேயே அமைக்கலாம்.