தென்காசியில் 65 ஆயிரம் சதுரஅடியில் ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனைக்கு முயற்சி
தென்காசியில் கின்னஸ் சாதனை முயற்சியாக 65ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மிகப்பெரிய ஓவியம் வரையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசியில் கின்னஸ் சாதனை முயற்சியாக 65ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மிகப்பெரிய ஓவியம் வரையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பரதாலயா கல்சுரல் அகாதெமி சார்பில் மிகப்பெரிய ஓவியம் வரையும் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் ஜி.சந்திரசேகரன் தலைமை வகித்தார். ரவிராஜ் பைன் கலைக் கல்லூரி முதல்வர் ரவிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
போட்டியில், திருவண்ணாமலை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி,திருநெல்வேலி, நாமக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பள்ளி,மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள் 997 பேர் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர்.
இயற்கையை பாதுகாப்போம் என்ற கருத்தை மையமாக கொண்டு வரையப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக ஆசியா புத்தக பதிவுகள் விவேக் ஆர்.நாயர், ஜெட்லி புத்தக பதிவுகள் நிறுவனர் ஏ.ஜெட்லீ ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
ஓவியம் வரையும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கின்னஸ் சாதனைக்குரிய வழிகாட்டுதல்களின் படி நடைபெற்றது. கின்னஸ் சாதனைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் எம்.புதியபாஸ்கர், பசுமை இந்தியா உலக சாதனையாளர் ஏ.சூசைராஜ், மேலநீலிதநல்லூர் பி.எம்.டிகல்லூரி உதவி பேராசிரியர் அனிதா அருள், ரோட்டரி உதவிஆளுநர் மாரிமுத்து,குற்றாலம் ரோட்டரிசங்க அட்வைசர் திருப்பதி, உதவி ஆளுநர் தேர்வு ஜி.மாடசாமி, குற்றாலம் ரோட்டரி எலைட் தலைவர் கனகசபை, செயலர் ராமகிருஷ்ணன், ஓவியமாஸ்டர் ரஞ்சித்குமார், எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணா பள்ளிகளின் தாளாளர் திவாகரன், செயின்ட்ஜோசப் கல்லூரி செயலர் போஸ்குணசீலன், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பரதாலயா கல்சுரல் அகாதெமி நிர்வாக இயக்குநர் செல்வவிநாயகம் வரவேற்றார். இயக்குநர் ஜி.கல்பனா நன்றி கூறினார்.