சங்கரன்கோவிலில் கைதி தப்பி ஓட்டம்
சங்கரன்கோவிலில் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி போலீஸாரிடமிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவிலில் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி போலீஸாரிடமிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரிவலம்வந்தநல்லூர் அருகே கோமதிமுத்துபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் பால்ராஜ் (40). அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் சீனிவாசன் மகன் முனியராஜ்(35). இவர், செவ்வாய்க்கிழமை மது போதையில் பால்ராஜிடம் தகராறு செய்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து முனியராஜைக் கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனை செய்து, சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்த போலீஸார், முனியராஜை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் அங்கு பரிசோதனை முடிந்ததும், முனியராஜ் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய கைதியை போலீஸார் தேடி வருகின்றனர்.