பாளையங்கோட்டையில் நீதிமன்றத்தில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீதித்துறை சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கே. ராஜசேகர் தலைமை வகித்தார். கூடுதல் அமர்வு நீதிபதிகள் ஏ. அப்துல்காதர், சி.பி.எம். சந்திரா, பி. ஜெயராஜ், ஒய். கிளாட்சன் பிளசன்ட் தாகூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலர் உ. ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இதில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கெங்கராஜ், கூடுதல் உரிமையியல் நீதிபதி தனஞ்செயன், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகள் ராமதாஸ், கார்த்திகேயன், மாலதி, பிஸ்மிதா, வழக்குரைஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.