பாளை.யில் ஜான் பாண்டியன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்- தலைவர் ஜான் பாண்டியன். இவருடைய வீடு, பாளையங்கோட்டை சமாதானபுரம் மனகாவலம் பிள்ளை நகர் பகுதியில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான் பாண்டியன், மாலை 6 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் இரவு 7 மணிக்கு ஜான் பாண்டியன் வீடு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர், அவருடைய வீட்டின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். வீட்டின் முன்புறத்தில் உள்ள மரத்தின் மீது பட்டு பெட்ரோல் குண்டுகள் கீழே விழுந்தன. இதனால் வீட்டு வாசலில் லேசாக தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கு நின்ற ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பெட்ரோல் குண்டை வீசிய மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அப்போது ஜான் பாண்டியன் வீட்டு முன்பு பாதுகாப்பிற்கு நின்ற போலீஸார் மர்மநபர்களை விரட்டினர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மர்மநபர்கள், மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். மர்மநபர்களின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடிய நபர்கள் யார் என்பது குறித்து ஜான் பாண்டியன் வீட்டு வாசலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
காரணம் என்ன? தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் திருமண நிகழ்ச்சிக்கு ஜான் பாண்டியன் சென்றபோது, அந்த நிகழ்ச்சிக்கு தச்சநல்லூரை சேர்ந்த பிரபல ரெளடி ஒருவர், தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாகவே, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.