தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் கல்வி நிலையங்கள் பதிவுக்கு மார்ச் 30 கடைசி
தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் கல்வி நிலையங்களைப் பதிவு செய்ய இம் மாதம் 30 ஆம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் கல்வி நிலையங்களைப் பதிவு செய்ய இம் மாதம் 30 ஆம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள், வாழ்க்கை தொழிற்கல்வி, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், எம்ஃபில், ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்-மாணவிகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித்தொகை இணையம் (NATIONAL SCHOLARSHIP PORTAL) மூலம் வழங்கப்படுகிறது.
இக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் WWW.SCHOLARSHIPS.GOV.IN இணையதளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்துள்ளதையும், பயனீட்டாளர் குறியீடு (யூசர் ஐடி) பெறப்பட்டுள்ளதையும் உறுதி செய்ய வேண்டும் AISHE/UDISE எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பின் அந்த விவரத்தினை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.
AISHE எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் WWW.AISHE.NIC.IN என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்து பெறலாம். பள்ளிகளைப் பொருத்தவரை UDISE எண்ணுக்கு முதன்மைக் கல்வி அலுவலரை அணுகலாம். இணையத்தில் கல்வி நிலையத்தினை பதிவு செய்வது தொடர்பாக கல்வி நிலைய முதல்வர், தலைமையாசிரியர், டீன் கோரிக்கை கடிதம் (சுய ஒப்பமிட்டது), செல்லிடப்பேசி எண்கள், AISHE/UDISE எண், கல்வி நிலையத்தின் முழு முகவரி, இதர விவரங்கள் (கோரப்பட்டால்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்புகொள்ளலாம்.
கல்வி நிலையங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்வதற்கு இம் மாதம் 30 கடைசி நாளாகும். இணையதளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் மட்டுமே 2018-19 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற வாய்ப்பு கிடைக்கும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.