முகப்பு
திருநெல்வேலி

விசைத்தறி தொழிலாளர் ஊதிய உயர்வு பேச்சு தோல்வி: 18இல் மீண்டும் பேச்சுவார்த்தை

விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வரும் 18 இல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்

Updated On : 15 மே, 2018 at 3:51 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வரும் 18 இல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் வட்டாரத்தில் 5,000 விசைத்தறி தொழிலாளர்கள் துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் வீடு சார்ந்த சிறு விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் மூலம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 60 சதவீதம் கூலி உயர்வு, தேசிய விடுப்பு தினங்களில் நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ. 180 ஐ ரூ. 300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி தொழிலாளர் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை (மே 14) பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாளையங்கோட்டை திருமால் நகரிலுள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆணையர் அப்துல் காதர் சுபேர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிற்சங்கம் சார்பில் சிஐடியூ விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ. மாடசாமி, மாவட்டச் செயலர் ரத்தினவேலு, புளியங்குடி விசைத்தறி தொழிலாளர் சங்க செயலர் வேலு, விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.ஆர். சுப்பிரமணியன், செயலர் பி.எஸ்.ஏ. சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மீண்டும் பேச்சுவார்த்தை: இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை விசைத்தறி உற்பத்தியாளர்கள் ஏற்கவில்லை. 2014-15 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படை ஊதியம் வழங்கப்படும்; முன்அறிவிப்பு இல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் பல கோடிக்கு துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது; போராட்டம் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு செய்ய வேண்டும் என உற்பத்தியாளர் கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து மீண்டும் வரும் 18 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
தொடர்ந்து 15 தினங்களாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தால் சுமார் ரூ. 7 கோடி மதிப்புக்கு துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.