குடிநீர் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் குறிஞ்சாகுளம் மக்கள் முற்றுகை
வி.கே.புதூர் அருகேயுள்ள குறிஞ்சாகுளத்தைச் சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வி.கே.புதூர் அருகேயுள்ள குறிஞ்சாகுளத்தைச் சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குறிஞ்சாகுளம் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மருதப்பபுரம் ஊராட்சிக்குள்பட்ட குறிஞ்சாகுளம் குறிஞ்சிநகர், இந்திரா நகர், காளியம்மன் கோயில் தெரு, கிழக்கு காலனி ஆகிய பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி இருக்கிறது. ஆனால் குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து மருதப்பபுரம் ஊராட்சியில் முறையிட்டால், கிணற்றிலும், ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் இல்லை என கூறிவிட்டனர். அதன்பிறகு ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்ததன் எதிரொலியாக குறிஞ்சி நகர் பகுதியில் ஒரு குடிநீர் குழாய் அமைத்தார்கள். அதிலும் போதிய அளவில் தண்ணீர் வரவில்லை.
காளியம்மன் கோயில் தெருவில் உள்ள கிணறு சுற்றுச் சுவரின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் கிணற்றில் உள்ள மோட்டாரும் செயல்படாமல் உள்ளது. எனவே புதிய மோட்டாரை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.