திரைப்பட இயக்குநர் பாலா அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்: நேரில் ஆஜராவதில் விலக்கு
திரைப்பட இயக்குநர் பாலா அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.
திரைப்பட இயக்குநர் பாலா அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.
இயக்குநர் பாலா இயக்கி, 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன். இந்தத் திரைப்படத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்தும் தவறான கருத்து இடம்பெற்றிருந்ததாக இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மகன் சங்கர் ஆத்மஜன் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கை நடத்த தடைவாங்கிய நிலையில், தடை காலம் முடிந்து அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜூன் 29 ஆம் தேதி வழக்கில் பாலா, ஆர்யா ஆஜராகாததையடுத்து, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அம்பாசமுத்திரம் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இயக்குநர் பாலா திங்கள்கிழமை ஆஜரானார். அவரது சார்பாக வழக்குரைஞர் முகம்மது உசேன் தலைமையில் வழக்குரைஞர்கள் ஆஜராகி, தொடர்ந்து நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்குக் கோரினர்.
இதையடுத்து, இயக்குநர் பாலா, வழக்கில் நேரில் ஆஜராவதிலிலிருந்து விலக்கு அளிப்பதோடு, அவர்மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டையும் நீக்கி நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் நடிகர் ஆர்யா நவ. 16 ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சங்கர் ஆத்மஜன் சார்பில், அம்பாசமுத்திரம் மூத்த வழக்குரைஞர் ரமேஷ் ஆஜரானார்.