திருநெல்வேலி அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கில், ஆலங்குளம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இளைஞர் சரணடைந்தார்.
திருநெல்வேலி அருகே சிவந்திப்பட்டி முத்தூர் ஜெயா நகரைச் சேர்ந்த சரவணன் மனைவி செல்வி (28). இவர் கடந்த ஜூன் 8ஆம் தேதி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது பைக்கில் ரெட்டியார்பட்டி நோக்கிச் சென்றாராம். நங்கூரம் சிட்டி குடியிருப்பு அருகே சென்றபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர், செல்வியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, தங்கச் சங்கிலி மற்றும் கம்மல் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினராம். இதுதொடர்பாக செல்வியின் புகாரின்பேரில் சிவந்திபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இவ்வழக்குத் தொடர்பாக பாளையங்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த ஐயாதுரை மகன் மாரிமுத்து (22) ஆலங்குளம் குற்றவியல் நடுவர் மன்றத்தில், வியாழக்கிழமை சரணடைந்தார். நீதிபதி பிச்சைராஜன் அவரை வரும் திங்கள்கிழமை வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும், அதன் பின்னர் திருநெல்வேலி குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஒப்படைக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.