ஆலங்குளம், செங்கோட்டை, சங்கரன்கோவில் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயதிரங்கள் வாகனங்களில் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியர் கந்தப்பன் தலைமையில் தேர்தல் துணை வட்டாட்சியர் மாரிச்செல்வம் முன்னிலையில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 27 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
சங்கரன்கோவில்: தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சங்கரன்கோவில் பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 274 வாக்குச் சாவடிகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிக்குமார், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம்,தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் செல்வக்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இங்கு, 13 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனவும், 7 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலைக் கண்காணிக்க 13 நுண் பார்வையாளர்கள் உள்பட 1545 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். போலீஸாருடன் துணை ராணுவப் படையினர் 24 பேர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
செங்கோட்டை: தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கடையநல்லூர் பேரவைத் தொகுதியில் உள்ள 325 வாக்குச்சாவடிகளுக்கு, செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடாச்சலம், தேர்தல் பணிக்குழுவினர் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.