சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித் தவசு திருவிழாவையொட்டி கோமதி அம்பாள் ஞாயிற்றுக்கிழமை சிவலிங்க தரிசன அலங்காரத்துடன் வீதியுலா வந்தார்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் இரவு கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தேவார இன்னிசை மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. 2ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை சிவலிங்க தரிசன அலங்காரத்தில் கோமதி அம்பாள் வீதியுலா வந்தார். அப்போது திரளான பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்தனர். இரவில் அம்பாள் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். முன்னதாக கோயில் அரங்கத்தில் திருநெல்வேலி சிவாலயா நாட்டியப் பள்ளி சார்பில் காரைக்கால் அம்மையார் சரிதம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
தேரோட்டம்: 9ஆம் திருநாளான ஆக. 11ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. 11ஆம் திருநாளான ஆக.13ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு ஆடித் தவசுக் காட்சி நடைபெறும்.