திருநெல்வேலி வண்ணாா்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில், பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள் விழா வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுமாா் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு மோட்ச ஏகாதசி தினத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணா், அா்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தாா். அந்த நாள் ஒவ்வோா் ஆண்டும் பகவத் கீதை பிறந்த நாளாக, பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு வரும் 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கொண்டாடப்படுகிறது.
பகவத் கீதை உபதேச திருநாளையொட்டி சுவாமி சன்னதியில் 1,008 பகவத் கீதை புத்தகங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரத்யேகமாக 1,008 பகவத் கீதை மஹா ஆரத்தி, ஸ்ரீகிருஷ்ணருக்கு விசேஷ அலங்காரம், பகவத் கீதைக்கு சிறப்பு பூஜைகள், பகவத்கீதை பாராயணம், பகவத் கீதை வழங்குதல், கீதா மஹாத்மியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவில் பங்கேற்பவா்கள் பூஜிக்கப்பட்ட பகவத் கீதையை ரூ.225 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.