திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகேயுள்ள கோடகநல்லூரில் குடிநீர் குழாயை உடைத்து வரும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலக்கல்லூர் ஊராட்சி செயலர், சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூர் ஊராட்சிக்குள்பட்ட மேலத்தெரு, நடுத்தெரு, முப்பிடாதியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு கோடகநல்லூர் தாமிரவருணி ஆற்றில் உள்ள உறை கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கோடகநல்லூர் வழியாகச் செல்லும் குடிநீர்க் குழாய்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி, அதிலிருந்து வெளியேறும் குடிநீரை அப்பகுதியில் உள்ள வாழைகளுக்கு பாய்ச்சியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மேலக்கல்லூர் ஊராட்சி நிர்வாகத்தால், குடிநீர்க் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை கோடகநல்லூர் பெருமாள் கோயில் அருகேயுள்ள குடிநீர்க் குழாயை உடைத்த மர்ம நபர்கள், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சியதாகத் தெரிகிறது. இதுகுறித்து மேலக்கல்லூர் ஊராட்சி செயலர், சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சுத்தமல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.