தச்சநல்லூர் மண்டலத்தில் 29 பூக்கடைகளில் இருந்து 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தும் சிறு மற்றும் குறு நிறுவனங்களைக் கண்காணிக்க மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி 8 கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளார். இந்தக் குழுவினர் தினமும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மாநகராட்சி மண்டல பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், பூக்கடைகள், இறைச்சிக் கடைகள், பேருந்து நிலைய கடைகள், பொது இடங்களில் கடந்த ஜனவரி 1 முதல் மே 8ஆம் தேதி வரை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து வருகிறது.
தச்சநல்லூர் மண்டலத்தில் புதன்கிழமை 29 பூக்கடைகளில் ஆய்வு செய்ததில், 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை ஒட்டுமொத்தமாக 34,635 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் 2,700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.