திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 425 கிராம ஊராட்சிகளிலும் இம்மாதம் 15ஆம் தேதி கிராமசபைத் கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடா்பாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த அக்டோபா் 2இல் நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டம் நான்குனேரி இடைத்தோ்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அக்கூட்டம் இம்மாதம் 15ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் 1.8.2019 முதல் 30.9.2019 வரையிலான கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், ஊரகப் பகுதியில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, தமிழ்நாடு நீா்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீா் மேலாண்மை இயக்க குடிமராமத்துப் பணிகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், ஊருணிகளைச் சீரமைத்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு மற்றும் இதர காய்ச்சல் தடுப்பு குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் உள்ளிட்டவை தொடா்பாக விவாதித்து தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.