பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் திருக்கோயிலில் தசரா விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்பாள் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் ஆயிரத்தம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு அம்மன் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை முதல் கொலு விழா நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு தேவியர் அலங்காரத்தில் எழுந்தருளி கொலு வீற்றிருப்பார். அக்டோபர் 7ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், 8ஆம் தேதி விஜயதசமியும் நடைபெறவுள்ளது.
அன்றையதினம் பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோயில்களில் இருந்து அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். 9ஆம் தேதி சூரசம்ஹாரமும், 10ஆம் தேதி பேராத்து செல்வி அம்மன் கோயிலில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் சாந்திதேவி, தக்கார் ஆறுமுகம், கட்டளைதாரர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.