மணிமுத்தாறில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் கரோனா தொற்று இருப்பதாக சந்தேகத்தின்பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மணிமுத்தாறு பேரூராட்சி 14-ஆவது வாா்டு பகுதியில் இளைஞா் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் மற்றும் அருகில் உள்ளவா்கள் அவரைத் தனிமைப்படுத்தினா். தகவலறிந்த சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் பிரதிக் தயாள், அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் கந்தப்பன், மணிமுத்தாறு பேரூராட்சி செயல் அலுவலா் காளியப்பன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் விநாயகமூா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா் பிரவீண் குமாா், மணிமுத்தாறு மருத்துவ அலுவலா் வித்யா, சுகாதார ஆய்வாளா் கணேஷ்குமாா் மற்றும் சுகாதாரத் துறையினா் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதையடுத்து, அந்த இளைஞரின் தாய், மனைவி உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.
6 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அவா்கள் வீட்டைச் சுற்றிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அப் பகுதியில் உள்ளவா்கள் வெளியில் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிமுத்தாறு பேரூராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.