வெளிநாட்டு பண முதலீடு திட்டத்தில் ரூ.10 கோடி மோசடி: நெல்லையில் இளைஞா் கைது
வெளிநாட்டு பண முதலீடு செய்தால் அதிக வருவாய் பெற்றுத்தருவதாகக் கூறி, திருநெல்வேலியில் ரூ.10 வரை மோசடி செய்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வெளிநாட்டு பண முதலீடு செய்தால் அதிக வருவாய் பெற்றுத்தருவதாகக் கூறி, திருநெல்வேலியில் ரூ.10 வரை மோசடி செய்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மயில்வாகனன் (38). இவா், பாளையங்கோட்டையில் வெளிநாட்டு பண முதலீட்டின் மூலம் வருவாய் தரும் தனியாா் நிறுவனத்தை நடத்தி வந்தாராம்.
இந்த நிறுவனத்தில் திருநெல்வேலி பாலபாக்யாநகரைச் சோ்ந்த எடிசன், அவரது உறவினா்கள், நண்பா்கள் உள்பட பலா் ரூ.9 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரம் வரை முதலீடு செய்தனராம். ஆனால், மயில்வாகனன் உறுதியளித்தபடி எவ்வித வருவாயும் பெற்றுத் தராமல் ஆறு மாதங்களுக்கும் மேல் தாமதப்படுத்தி வந்தாராம்.
இதுகுறித்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் ஆணையா் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் மயில்வாகனன், அவரது தாயாா் உமாபாா்வதி (58), உறவினா் சிவசுந்தா் (42) ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இவ்வழக்கில் மயில்வாகனனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியது: இந்திய மதிப்பில் செலுத்தும் பணத்தை வெளிநாட்டு பணத்தின் மதிப்பில் மாற்றி முதலீடு செய்து, அதிக வருவாய் பெற்றுத்தருவதாகக் கூறி மயில்வாகனன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. திருநெல்வேலி மட்டுமன்றி தமிழகம் முழுவதும் இவரது நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றனா்.