நெல்லையில் பைக் மீது லாரி மோதி விபத்து: பெண் பலி
திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.
திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(57). கோயில் பூசாரி. இவரது மனைவி சாந்தி (54). இவர்கள் இருவரும் இன்று மதியம் திருநெல்வேலி நகரத்திற்கு தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் ஸ்ரீபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவர்களுக்குப் பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியது.
இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது சாந்தி மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.