முகப்பு
திருநெல்வேலி

மதச்சார்பற்ற மக்கள் நலக் கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும்: கே.எஸ். அழகிரி

மதச்சார்பற்ற மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றிபெறும் என்றார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

மதச்சார்பற்ற மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றிபெறும் என்றார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியமானதாகும். மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள். 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசு மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளது. தொழில் மற்றும் விவசாய துறையில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், விவசாயம் மற்றும் தொழில்துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டுவருவோம். மக்கள் ஆதரவு திமுக கூட்டணிக்கு உள்ளது. எனவே, வரும் 6ஆம் தேதி நடக்கும் தேர்தல் தமிழகத்தில் மிகப்பெரிய அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும். வளர்ச்சியை கொண்டு வருவதும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, தமிழர்களின் சுயமரியைதையை பாதுகாப்பதும், தில்லியின் அதிகாரத்தை தடுப்பதும்தான் எங்கள் நோக்கம். மேலும், கூட்டாட்சியை நாங்கள் கொண்டுவருவோம். பிரதமர் தமிழகத்திற்கு இரண்டு முறை வந்துள்ளார். 

அவர் கலந்து கொண்ட கூட்டங்களில் நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட எந்த விஷயத்தையும் பேசாமல் உள்ளுர் அரசியல் பற்றி பேசியிருப்பது கண்டிக்கதக்கது. நாட்டின் உள்துறை அமைச்சர் நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மேம்பாடு  குறித்து பேசவேண்டுமே தவிர கட்சியின் குடும்பத்தை பற்றி பேசுவது கண்டிக்கதக்கது. கட்சித் தலைவர்களின் குழந்தைகள் அவர்கள் குடும்பம் சார்ந்த கட்சியில் இருப்பது தவறில்லை. தந்தை ஒருகட்சியிலும் மகன் ஒருகட்சியிலும் இருப்பது சாத்தியமற்றது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். 

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறிய எந்த திட்டங்களையும் நிறைவேற்றமுடியாது. மத்திய அரசின் தோல்வி எரிபொருளில் உள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. ஆனால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை குறைந்திருக்க வேண்டும். சரியாஸ் பொருளாதார திட்டமிடல் இல்லாததால், இவற்றின் விலை அதிகரித்திருக்கிறது. இதனால், விலைவாசி மிக உயர்ந்து மக்கள் சிரமப்படுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கலால் வரியை குறைப்போம். இதன்மூலம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறையும்.

அதிமுக ஆட்சியில் தான் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் வீட்டில் கொள்ளை மற்றும் கொலை சம்பவம் நடந்தது. இதில், தொடர்புடையவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், பிரதமர் மோடி , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாகவும், திமுக கூட்டணி ஆட்சி அமைத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் எனவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

இந்திய தேர்தல் ஆணையம் ஆளும்கட்சியினர் பணம் கொடுத்தால் அவர்களை பிடிப்பது கிடையாது. ஆனால், கடைகாரர்கள், வியாபாரிகள், ஏ.டி.எம். இயந்தரத்திற்கு கொண்டு சென்ற பணத்தை மட்டுமே பிடிக்கிறார்கள். ஆளும்கட்சியினர் பணத்தால் மக்களை வாங்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் சக்தி பணநாயகத்தை வென்றுகாட்டும். திமுக கூட்டணி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நிச்சயம்  தமிழகத்தில் 200 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றார். 

இந்த சந்திப்பின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் கே.சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாவட்ட பொதுச் செயலர் சொக்கலிங்க குமார், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகம்மது அனஸ் ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.