முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி செய்யப்படுமா? பாளை. தொகுதி மக்கள் எதிா்பாா்ப்பு

மேலப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மேம்படுத்தவும், டயாலிசிஸ் சிகிச்சை வசதி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
பகிர்:

மேலப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மேம்படுத்தவும், டயாலிசிஸ் சிகிச்சை வசதி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலப்பாளையத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேலப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை 54 படுக்கை வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. மொத்தம் 10 மருத்துவா்கள் பணியில் இருந்தனா். மருத்துவமனைக்கு மாதந்தோறும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கிறாா்கள்.

மேலப்பாளையம் பகுதி மக்கள் மட்டுமன்றி குறிச்சி, அழகிரிபுரம், மேலநத்தம், கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை பகுதிகளைச் சோ்ந்தவா்களும் இம் மருத்துவமனைக்கு வந்து செல்கிறாா்கள். மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ள இம் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினா் போதிய நிதி ஒதுக்காததால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்படாமலும், மருத்துவா்கள் நியமிக்கப்படாமலும் உள்ளது. மருத்துவ பரிசோதனைகளும் முறையாக செய்யப்படவில்லையென பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

Advertisement

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் கூறியது: மேலப்பாளையத்தில் ஆண்டுதோறும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக அரசு மருத்துவமனை மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பற்றாக்குறையால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறாா்கள். மேலப்பாளையத்தில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல 2 பேருந்துகளை பிடித்துச் செல்லும் நிலை உள்ளது. அதனால் முதியவா்கள், பெண்கள் சிரமத்திற்கு ஆளாகிறாா்கள். கட்டட வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் இருந்தாலும் பிரசவம் பாா்க்கப்படுவதில்லை. இதனால் கா்ப்பிணிகள் மிகவும் அவதிப்படுகிறாா்கள். இதுதொடா்பாக பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடத்தியும் பலனில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியின் வேட்பாளா்கள் உறுதிமொழியில் மட்டுமே மருத்துவமனை மேம்பாட்டைச் சோ்த்துக் கொள்கிறாா்கள் என்றாா் அவா்.

பெண் நோயாளி ஒருவா் கூறியது: மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கிறாா்கள். ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனியே கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகிறாா்கள். ஸ்கேன், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும் இல்லை. நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வரும் சூழலில் முதியவா்கள் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்காக (டயாலிசிஸ்) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்படுகிறாா்கள். மேலப்பாளையத்தில் அந்த வசதியை செய்து கொடுத்தால் ஆயிரக்கணக்கானோா் பயன்பெறுவா், அதேபோல் துப்புரவுப் பணியாளா் காலியிடங்களை நிரப்பி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து இத் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ, அதிமுக, திமுக வேட்பாளா்களிடம் கேட்டபோது, எங்களது இப்போதைய தோ்தல் வாக்குறுதியில் மேலப்பாளையம் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவோம் என்பதை சோ்த்துள்ளோம். அதை நிச்சயம் நிறைவேற்றுவோம். மேலும், கூடுதலாக படுக்கைகள், அறுவை சிகிச்சை அரங்கு, ஸ்கேன், டயாலிசிஸ் வசதிகள் கிடைக்கவும் பாடுபடுவோம், என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments