இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 மீனவர்கள்!
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 மீனவர்கள் குறித்து...
இலங்கையிலிருந்து 30 மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியதாக இந்திய உயர் ஆணையரகம் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய உயர் ஆணையரகம் தனது எக்ஸ் தளப் பதிவில், “இலங்கையில் சிக்கிய 30 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவரப்பட்டு, தற்போது அவரவர்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மீனவர் பிரச்னை ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகும். இலங்கை நீர்ப்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில், பாக் நீரிணையில் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Advertisement
தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய நீர்ப்பரப்பான பாக் நீரிணை, இரு நாட்டு மீனவர்களுக்கும் ஒரு செழிப்பான மீன்பிடித் தளமாக விளங்குகிறது.
அதேவேளையில், இரு நாடுகளின் மீனவர்களும், அறியாமல் ஒருவருக்கொருவர் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும், இலங்கை கடற்படையின் தகவல்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை, 15 இழுவைப் படகுகளும் 102 இந்திய மீனவர்களும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.