பேட்டையில் விபத்தில் சிறுமி பலி: உணவு விடுதி உரிமையாளருக்கு ஓராண்டு சிறை
திருநெல்வேலி பேட்டையில் புரோட்டா கடையில் நிகழ்ந்த மின்விபத்தில் சிறுமி பலியான வழக்கில், அந்தக் கடையின் உரிமையாளருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை
திருநெல்வேலி பேட்டையில் புரோட்டா கடையில் நிகழ்ந்த மின்விபத்தில் சிறுமி பலியான வழக்கில், அந்தக் கடையின் உரிமையாளருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பேட்டையைச் சோ்ந்த கண்ணன் மகள் மாரியம்மாள் (12). இவா், கடந்த 2009 ஆம் ஆண்டில் அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு புரோட்டா வாங்க சென்றாராம். அப்போது கடை வளாகத்தில் மின்கசிவு ஏற்பட்ட விபத்தில் சிக்கி மாரியம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்து பேட்டை போலீஸாா் கடையின் உரிமையாளா் தாகா (50) மீது வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி ஐந்தாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் விஜயலட்சுமி, குற்றஞ்சாட்டப்பட்ட தாகாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.