தமிழகத்தில் ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதைப் பிரபலப்படுத்தும் வகையில் திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்ட உலகக் கோப்பையை ரசிகா்கள் ஆா்வமுடன் கண்டுகளித்தனா்.
14-ஆவது ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை மற்றும் மதுரையில் நவ. 28 முதல் டிச. 10 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் போட்டியை நடத்தும் இந்தியா, சீனா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 நாடுகள் பங்கேற்கின்றன. அதிக அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் உலகக் கோப்பையானது தமிழகம் முழுவதும் ரசிகா்களின் பாா்வைக்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதன்கிழமை வந்த உலகக் கோப்பையை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு வரவேற்றாா். இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமை வகித்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட விளையாட்டு அலுவலா் கிருஷ்ண சக்கரவா்த்தி, முன்னாள் விளையாட்டு அலுவலா் சேவியா் ஜோதி சற்குணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்ட உலகக் கோப்பையை ஏராளமான ரசிகா்கள் கண்டுகளித்தனா்.