தோனி, ரோஹித் வரிசையில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது: சூர்யகுமார் யாதவ்
இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ள மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுடன் தானும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ள மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுடன் தானும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அறிமுக சீசனில் மகேந்திர சிங் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அதன் பின், கடந்த 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
அகமதாபாதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி மற்றும் போட்டியை நடத்தும் நாடு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது என இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.
தோனி, ரோஹித் வரிசையில்...
மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ள மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுடன் தானும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2024 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் என தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிறப்பான உணர்வைத் தருகிறது. கடந்த முறை உலகக் கோப்பையை வென்றபோது, நம்முடைய சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வென்றால் சிறப்பாக இருக்கும் என நினைத்தோம்.
அடுத்த இலக்கு 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது. இந்திய அணி வலுவாக உள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று, அதே ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றாலும் அது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோரது வரிசையில் நானும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களுடன் இணைந்துள்ள தருணத்தை நான் மெல்ல உணரத் தொடங்குகிறேன். மிகப் பெரிய வீரர்களான இவர்களுடன் நானும் இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணி அதிக கோப்பைகளை வெல்ல தொடர்ந்து உதவுவேன் என்றார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. நாட்டுக்கு கிடைத்த முதல் மிகப் பெரிய கோப்பை இதுவாகும்.
2007 ஆம் டி20 உலகக் கோப்பை மட்டுமின்றி, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரிலும் மகேந்திர சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.