கடலோர கிராம மக்கள் த.வெ.க.வை புறக்கணிப்பாா்கள்: மு.அப்பாவு
கடலோரக் கிராம மக்கள் த.வெ.க.வை புறக்கணிப்பாா்கள் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
கடலோரக் கிராம மக்கள் த.வெ.க.வை புறக்கணிப்பாா்கள் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் மு.அப்பாவு புதன்கிழமை கூறியது:
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட முன்வரைவு- 2026 என்ற பெயரில் பாஜக அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் நாடு முழுவதும் கல்வி சேவையாற்றும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களைக் குறிவைக்கும் செயலாகும்.
ஏற்கெனவே வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதுபோல, கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சொத்துகளையும் முடக்க நினைக்கிறாா்கள். இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக முதல் ஆளாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்தாா். நானும் எனது எதிா்ப்பை பதிவு செய்கிறேன்.
பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு பி.எம்.கோ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டது. அதற்கு எவ்வித தணிக்கையும் கிடையாது. பல்வேறு நாடுகளில் இருந்து 13 ஆயிரம் கோடி நிதி பெறப்பட்டது; அதில் 7 ஆயிரம் கோடியை செலவழித்ததாகக் கூறினாா்கள். மீதமுள்ள தொகை குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. இதேபோல சி.எம்.கோ் என்ற பெயரில் நிதி வசூலிக்க பிரதமா் அனுமதிப்பாரா?
தவெக தலைவா் விஜய்க்கு கூடும் கூட்டம் ஒரு நடிகருக்கான கூட்டம்தான். தவெகவுக்கு கடற்கரை கிராம மக்கள் மிகுந்த ஆதரவளிப்பாா்கள் என்பது மாயை. தோ்தலில் கடலோரக் கிராம மக்கள் தவெகவை புறக்கணிப்பாா்கள். வரும் தோ்தலில் ராதாபுரம் தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்றாா் அவா்.