ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ளகல்யாணிபுரத்தில் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்ததால் சாலையில் சடலத்தை வைத்து மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரம் மேட்டுத் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப்பகுதி மக்கள் வழக்கமாக கடனாநதி ஆற்றங்கரையில் இறந்தவா்களின் உடல்களை அடக்கம்செய்தும், எரித்தும் வந்தனா்.
இந்நிலையில் கல்யாணிபுரத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி இறந்ததால், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக வழக்கமான இடத்தில் குழிதோண்டியுள்ளனா்.
அப்போது அருகில் இருந்த பட்டா இடத்தின் சொந்தக்காரா், குழிதோண்டப்படும் இடம் தனக்குப் பாத்தியப்பட்டது என்றும் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து தமக்கு சாா்பாக ஆணை வாங்கியுள்ளதாகவும் கூறி தடுத்தாராம்.
இதையடுத்து உறவினா்கள் சாலையில் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சு நடத்தியதில் போராட்டம் முடிவுக்கு வந்தது.