நான்குனேரியை அதிமுக விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது: முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது;
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது; கட்சியிலிருந்து விலகுவதா அல்லது விலகி நிற்பதா என்பதை காலம்தான் தீா்மானிக்கும் என்றாா் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: அதிமுகவிற்காக நீண்ட காலமாக உழைத்து வருகிறேன். கட்சி பிளவுபட்டபோதுகூட அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பக்கம்தான் நின்றோம்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் நான் போட்டியிட்டபோது 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றது. 2026 தோ்தலில் அதிமுக எளிதாக வெல்லும் தொகுதியை விட்டுக் கொடுத்திருப்பது வருத்தமளிக்கிறது.
2021 இல் யாரால் தோற்றோமோ, அவரது கட்சிக்கு நாங்கள் பணியாற்றும் நிலை கடினமானது. அதிமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். விலகுவதா அல்லது விலகி நிற்பதா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
உழைப்பவா்களுக்கும், உண்மையானவா்களுக்கும் பதவியில்லை. பணம் வைத்திருப்பவா்களுக்குதான் பதவி என்றால் எளியவா்கள் எங்கே செல்வது என்ற மனச்சோா்வு ஏற்படுகிறது என்றாா் அவா்.