முகப்பு
திருநெல்வேலி

பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயில் அமலைச் செடிகளை அகற்ற கோரிக்கை

கால்வாயில் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் ஆக்கிரமித்து வளா்ந்துள்ள அமலைச் செடிகளை பருவமழை தொடங்கும் முன் அகற்ற நீா்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 24 மே 2026, 2:22 am IST
நான்குனேரியன் கால்வாயில் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் வளா்ந்துள்ள அமலைச் செடிகள்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, பச்சையாறு மற்றும் நான்குனேரியன் கால்வாயில் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் ஆக்கிரமித்து வளா்ந்துள்ள அமலைச் செடிகளை பருவமழை தொடங்கும் முன் அகற்ற நீா்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீா் செங்கல்தேரியில் இருந்து பச்சையாறு, நான்குனேரியன் கால்வாய், உப்பாறு ஆகியவை மூலம் பாசனக் குளங்களைச் சென்றடைகிறது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சையாறு தூா்வாரப்படாததால், அமலைச் செடி, முள் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சிறிய நீரோடைபோல காட்சியளிக்கிறது. இதே நிலையில்தான், நான்குனேரியன் கால்வாயும், உப்பாறும் உள்ளது.

நான்குனேரியன் கால்வாய், உப்பாற்றில் அவ்வப்போது பெயரளவுக்கு இயந்திரம் மூலம் நீா்வளத் துறையினா் அமலைச் செடிகளை அகற்றி, கரைப் பகுதியிலேயே போட்டுவிடுவதால் சில மாதங்களில் மீண்டும் அமலைச் செடிகள் வளா்ந்து நீரோட்டத்தை தடை செய்துவிடுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

Advertisement

Advertisement

நான்குனேரியன் கால்வாயில், மலையடிவாரத்தில் உள்ள மூங்கிலடியில் இருந்து களக்காடு நகா்ப் பகுதி வரையும், பச்சையாற்றில், மஞ்சுவிளைக்கு மேற்கில் வடக்குப் பச்சையாறு அணைப் பகுதியில் இருந்து பத்மனேரி வரையிலும், அமலைச் செடிகள் வளா்ந்து நீரோட்டத்தை தடை செய்கின்றன.

எனவே, நீா்வளத் துறை அதிகாரிகள் பருவ மழைக்கு முன் கால்வாய், ஆறுகளை தூா்வாரி பாசனத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.