சிபிஐ அதிகாரி போல் பேசி ஓய்வுபெற்ற கால்நடைத் துறை இயக்குநரிடம் ரூ.53 லட்சம் மோசடி: பெங்களூரு நபா் கைது!
திருநெல்வேலி, மே 25: சிபிஐ அதிகாரி போல் பேசி, ஓய்வுபெற்ற கால்நடைத் துறை இயக்குநரிடம் ரூ.53 லட்சத்தை மோசடி செய்ததாக, பெங்களூரைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் சேவியா் (80). ஓய்வுபெற்ற கால்நடைத் துறை இயக்குநா். இவரை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் பெங்களூரில் இருந்து சிபிஐ அதிகாரிகள் பேசுவதாகக் கூறி வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், அரசுக்கு எதிராக பேசியதாக தங்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலி முதல் தகவல் அறிக்கை அனுப்பி, இதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளனா்.
மேலும், குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு மாற்ற வேண்டும்; விசாரணை முடிந்ததும் முழுப் பணமும் திருப்பித் தரப்படும் எனக் கூறி, அவரிடமிருந்து இரண்டு தவணைகளாக ரூ.53 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
அதில், கா்நாடக மாநிலம், பெங்களூரை சோ்ந்த சந்தோஷ் பிரபு(44) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை சைபா் கிரைம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.