கோவில்பட்டி ஐயப்பன் கோயிலில் மண்டல, படி பூஜை
கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை மண்டல பூஜை மற்றும் படி பூஜைகள் நடைபெற்றன.
கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை மண்டல பூஜை மற்றும் படி பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி இவ்வாலய வளாகத்தில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சக்தி சாஸ்தா விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு கூட்டு கன்னி பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஐயப்பன் ரத வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து, உலக நலன் வேண்டி நிராஞ்சன ஊர்வலம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் சென்று ஐயப்பன் கோயில் வந்தடைந்தது.
புதன்கிழமை, மண்டல பூஜையை முன்னிட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், கலச பூஜை, கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர் 8.30 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க படி பூஜை நடைபெற்றது. பூஜைகளை எழிக்கோடு சதீஷன் நம்பூதிரி, கோவில்பட்டி ஐயப்பன் ஆலய மேல்சாந்தி சுஜித் வைகுண்டம் ஆகியோர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் சிங்கம் மாடசாமி தலைமையில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
ஆறுமுகனேரி: ஆத்தூர் அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் 47ஆம் ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி, தாமிரவருணி ஆற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து உச்சி கால பூஜை நடைபெற்றது.
இரவு ஜோதி புறப்பாடும், அதன் பின்னர் ஐயப்பன் ரத பவனியும் நடைபெற்றன. பின்னர் அன்ன பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்ப சேவா சமிதி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.