விபத்தில் காயமடைந்தவர் சாவு
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கோவில்பட்டியையடுத்த சத்திரப்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்தவர் கோபால்சாமி மகன் விஜயராஜ்(31). வெளிநாட்டில் இருந்து வந்த இவர் 10 தினங்களுக்கு முன்புதான் ஊருக்கு திரும்பினார்.
கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்த தனது மூத்த மகன் பிரவீண்குமாரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் இளைய மகன் பிரணவ்சஞ்சய்யுடன்(3) ஊருக்கு திரும்பியபோது, மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூர் அருகே அவரை பின்தொடர்ந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விஜயராஜ் மற்றும் அவரது மகன் பிரணவ்சஞ்சய் இருவரும் காயமடைந்தனர்.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் காயமடைந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு விஜயராஜ் புதன்கிழமை இறந்தார்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநர் மதுரை பெத்தநாச்சியார்புரம் மேட்டுத் தெரு வெங்கடாசலபதி நகரைச் சேர்ந்த த.ராஜனை(29) கைது செய்தனர்.