கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் சென்றுக் கொண்டிருந்த பள்ளி மாணவியை கேலி செய்து, ஆசிட் ஊற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்1 படித்து வரும் மாணவி, திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.
பாண்டவர்மங்கலம் பசுவந்தனை சாலையில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் அருகே சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து அதே ஊரைச் சேர்ந்த சமுத்திரப்பாண்டி மகன் ஸ்ரீவைகுண்டம் கலைக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் விக்னேஸ்வரன் (20) கேலி செய்தாராம்.
இதையடுத்து, மாணவியின் தாய் விக்னேஸ்வரன் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் சொல்லி கண்டித்தாராம். இதையடுத்து விக்னேஸ்வரன் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று, அவர் மீது ஆசிட் ஊற்றுவேன் என மிரட்டினாராம். இதுகுறித்து மாணவியின் தந்தை மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, பள்ளி மாணவியை கேலி செய்து ஆசிட் ஊற்றுவேன் என மிரட்டியதாக கல்லூரி மாணவரை கைது செய்தனர்.