திருச்செந்தூர் அருகே நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்செந்தூர் தோப்பூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் நயினார் (63). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரத்தில் உள்ள அவரது தோட்டத்தில் வேலை பார்த்து விட்டு திங்கள்கிழமையன்று பகலில் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருச்செந்தூர் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் கந்தசாமிபுரம் விலக்கு அருகேயுள்ள இசக்கியம்மன் கோயில் பகுதியில் வந்த போது, எதிர்பாராத விதமாக நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த நயினார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.