கோவில்பட்டியையடுத்த வில்லிசேரி கிராமப் பகுதியில் தடையின்றி மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பாரதிய கிசான் சங்கத்தினர் மின்வாரிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி வட்டம், வில்லிசேரி கிராமத்தில், தடையின்றி மின் விநியோகம் வழங்க வேண்டும். குறைந்த மின்னழுத்தம் ஏற்படாதவாறு கூடுதலாக மின்மாற்றிகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்ட மின்வாரிய அலுவலகம் முன் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர்.
இளைஞர் கல்வி சேவா முன்னேற்ற சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஜனகராஜ், மாரிச்சாமி உள்பட பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவர் ரெங்கநாயகலு, துணைத் தலைவர் பரமேஸ்வரன், செயலர் சேசுநாயக்கர் உள்ளிட்ட பலர் மின்வாரிய அலுவலகம் முன் திரண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர், கோவில்பட்டி கோட்ட உதவி மின் பொறியாளர் குருசாமியிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி கோட்டப் பொறியாளர், தங்கள் பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், குறைந்தழுத்த மின்சாரத்தை நிவர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.