உள்ளாட்சித் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மாநகராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என
மாநகராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளாட்சித் துறை ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராம ஊராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள், துப்பரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட தினக்கூலி பணி செய்பவர்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்சமாக ரூ. 624 ஊதியம் வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் முனியசாமி, பொருளாளர் செல்வராஜ், துணைத் தலைவர் ராமமூர்த்தி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலர் முருகன், ஒருங்கிணைப்பாளர் காசி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
சிறிதுநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தரையில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராம ஊராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிவோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.