கோவில்பட்டி நீதிமன்றத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகம்
நீதிமன்றங்களில் செயல்பட்டு வரும் சமரச மையங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் திங்கள்கிழமை விநியோகித்தனர்.
நீதிமன்றங்களில் செயல்பட்டு வரும் சமரச மையங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் திங்கள்கிழமை விநியோகித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண சமரச மையம் அமைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த மையத்தினால் வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படும் காலவிரயம், பணவிரயம் தவிர்க்கப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி பாபுலால் தலைமையில் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஜெயசுதாகர், வீரணன், அரசு சிவில் மற்றும் குற்றவியல் வழக்குரைஞர் சந்திரசேகர், வழக்குரைஞர்கள் ஸ்ரீரமணன், மகேந்திரகுமார், பாபுராஜ், சிவகுமார், செல்வகுமார், கோவிந்தசுப்பிரமணியன், சந்தானம் உள்பட திரளான வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் சார்பு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்கு விசாரணைக்காக ஆஜராகியிருந்தோர்களுக்கு நீதிமன்றங்களில் செயல்படும் சமரச மையங்களின் செயல்பாடுகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
சமரசத்தில் வழக்குகள் எவ்வித மேல்முறையீடு இல்லாமலும், விரைவாகவும் இறுதியான சுமுகத் தீர்வு கட்டணம் ஏதுமின்றி காண முடியும் என்றும், சமரசத்தின் மூலம் வழக்கு சுமுகமாக தீர்க்கப்பட்டால் நீதிமன்ற கட்டணத்தை திரும்ப ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிடும் என்பன உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை வழக்குரைஞர்கள் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர்.