தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை
தூத்துக்குடியில் தனியாக நடந்து சென்ற பெண் அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் தனியாக நடந்து சென்ற பெண் அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்த ஜோதிமாணிக்கம் மனைவி செல்வபாப்பா (52). இவர், வயலுக்கு சென்றுவிட்டு புதன்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். அந்தப் பகுதியில் உள்ள விவசாய சங்க கட்டடம் அருகே அவர் தனியாக நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனராம். இதில், செல்வபாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த முத்தையாபுரம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கொலையுண்ட செல்வபாப்பாவின் மகன் இசக்கிமுத்து அதே பகுதியில் கடந்த ஆண்டு சீட்டு விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்ததாகவும், அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.