திருப்பூர் மருத்துவர்களை கண்டித்து, தூத்துக்குடியில் செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் செவிலியர் மணிமாலாவை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுஜாதா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் வெங்கடேஷன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச் செயலர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் தங்கவேல், விஜயகுமார், ஆண்டிச்சாமி, மகாராஜன் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.