உத்தரப் பிரதேச மாநிலம், சபாய் நகரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான சப்-ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிக்கு கோவில்பட்டி வீரர் தேர்வு பெற்றுள்ளார்.
இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி ஹாக்கி வீரர்கள் தேர்வு மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகள் விருதுநகரில் நடைபெற்று சிறந்த 30 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு சென்னையில் கடந்த ஒரு வாரம் பயிற்சி நடைபெற்றது. அதில் 18 வீரர்களை மாநிலச் செயலர் ரேணுகாலட்சுமி தேர்ந்தெடுத்து அறிவித்தார்.
அதில், கோவில்பட்டி ராஜீவ் காந்தி ஹாக்கி அணி வீரர் பிரவீண் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அணிக்காக தேசியப் போட்டியில் கலந்துகொள்கிறார்.
இதையடுத்து அவரை தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகச் செயலர் குருசித்ரசண்முகபாரதி, பொருளாளர் மணிமாறன், துணைச் செயலர் முருகன் உள்ளிட்டோர் பாராட்டினர்.