தூத்துக்குடியில் வாகனங்களை சேதப்படுத்திய இருவர் கைது
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியில் சிலர் வீட்டின் முன்பு தங்களது வாகனங்களை நிறுத்தி இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வாகனங்களை சேதப்படுத்தினர். 6 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிந்த போலீஸார், வாகனங்களை சேதப்படுத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன், செல்சினிகாலனியைச் சேர்ந்த அய்யனார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது
கோவில்பட்டி, மே 14: கோவில்பட்டியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து நடைபெற்ற திருட்டு தொடர்பான வழக்கில் 3 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து கைக்கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட கடலையூர் சாலை, எட்டயபுரம் சாலை, பங்களா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடு, கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, வாட்ச், செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் திருட்டுப்போயின.
இதையடுத்து, கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் பவுல்ராஜ், விநாயகம் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசந்திரவடிவேல் தலைமையில் போலீஸார் வேலாயுதபுரம் சாலையில் நடத்திய வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர் மூப்பன்பட்டி அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் சசிகுமார் (29) என்பதும், அவர் வைத்திருந்த இருசக்கர வாகனம் கோவில்பட்டி மறவர் காலனி மேட்டுத் தெருவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சி. செல்வராஜுக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் அளித்த தகவலின் பேரில், திருட்டு வழக்கில் தொடர்புடைய பூரணம்மாள் காலனியைச் சேர்ந்த நாகூர்மீரான் மகன் செளபக்சாதிக் உள்பட 4 பேரை தேடிவந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு செளபக்சாதிக் கைது செய்யப்பட்டார்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மூவரை தேடி வந்தனர். இந்நிலையில், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் குருசந்திரவடிவேல், மணிமாறன், சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி ஆகியோர் ரயில்வே மேம்பாலம் அருகே திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் திருட்டு வழக்கில் தொடர்புடைய வடக்கு புதுக்கிராமம் 6ஆவது தெருவைச் சேர்ந்த மொட்டைசாமி மகன் கார்த்திக் (17), அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் சிவபாலன் (18), லாயல் மில் காலனியைச் சேர்ந்த சந்தனமாரியப்பன் மகன் மணிகண்டன் (16) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 30 வாட்ச், 2 செல்லிடப்பேசிகள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.