கட்டடத் தொழிலாளி கொலையில் தேடப்பட்ட விவசாயி கைது
சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட விவசாயியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட விவசாயியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகே பள்ளங்கிணறைச் சேர்ந்தவர் சு. செந்தில் (45). இவருக்கு மனைவி மற்றும் 7 வயதில் மகன் உள்ளனர். இவர் சென்னையில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த விவசாயி கா. லிங்கத்துரை(58) என்பவரிடம் செந்தில் கடந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினாராம். அதை லிங்கத்துரை திருப்பிக் கேட்டதற்கு காலம் தாழ்த்தி வந்ததால், இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், ஊருக்கு வந்திருந்த செந்தில் கடந்த 17ஆம் தேதி இரவு அவரது நண்பர் சின்னத்துரையுடன் மோட்டார் சைக்கிளில் பேய்க்குளம் அருகேயுள்ள சின்னமாடன்குடியிருப்பிற்கு சென்றார். அப்போது லிங்கத்துரையும், அவரது உறவினரான பள்ளங்கிணற்றைச் சேர்ந்த ஜெகனும் செந்திலை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், செட்டிகுளம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த லிங்கத்துரையை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான ஜெகனை தேடி வருகின்றனர்.