தூத்துக்குடியில் பயன்படுத்தாத நிலையில் உள்ள இலவச வீடுகளை தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாப்பிள்ளையூரணி கிராமம், சர்வே எண் 130-2 இல் உள்ள நிலத்தில் சுனாமியால் பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் குடியிருந்த நபர்களுக்கு வழங்கிட 30 வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது. இதில், தற்போது ஒரு வீட்டில் மட்டுமே ஆள்கள் உள்ளனர். மீதமுள்ள 29 வீடுகளை பயனாளிகள் பயன்படுத்தாமல் விட்டுச் சென்று விட்டனர். இது நீண்ட நாளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அந்த வீடுகளை வேறு தகுதியான நபர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, 29 வீடுகளின் பயனாளிகள் தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருப்பின் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக வேலைநாளில் வட்டாட்சியரிடம் 15 தினங்களுக்குள் தங்களது ஆட்சேபனையை தெரிவிக்கலாம். இல்லையெனில், தங்களது ஆட்சேபனையை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.