கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மந்தித்தோப்பு மேட்டுத் தெரு பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
மந்தித்தோப்பு ஊராட்சி மேட்டுத்தெரு பகுதியில் உள்ள துளசிங்க நகர், கணேஷ் நகர் பகுதியில் கடந்த சில நாள்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். மேலும் அப்பகுதியில் அன்றாட புழக்கத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறதாம்.
எனவே, சீரான குடிநீர் வழங்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடி நீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் பாபு தலைமையில், நகர உதவிச் செயலர் முனியசாமி, வட்ட உதவிச் செயலர் ராமகிருஷ்ணன், கிளைச் செயலர் முப்பிடாதி, கண்ணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவை ஒன்றிய ஆணையர் கிரியிடம் வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர், சம்பந்தப்பட்ட ஊராட்சி எழுத்தர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.