ஜிஎஸ்டி வரி விதிப்பால் தீப்பெட்டி, கடலைமிட்டாய் தொழில்கள் முடங்கிவிட்டதாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவில்பட்டி மேற்கு ஒன்றியம், மூப்பன்பட்டியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவர், ஆவல்நத்தம், சாலைபுதூர் விலக்கு, ஆலம்பட்டி, வானரமுட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சின்னக்காளாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது: மோடி கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. படித்தவர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இருக்கிற வேலையையும் அவர்கள் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரியால் தீப்பெட்டி, கடலைமிட்டாய் தொழில்கள் முடங்கியுள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக்கடன், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். 100 நாள் வேலை திட்டம், 150 நாள்களாக உயர்த்தப்படும். அனைத்துப் பகுதிகளுக்கும் கூட்டுக்குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஒரு கோடி இளைஞர்கள் சாலைப்பணியாளர்களாகவும், 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப் பணியாளர்களாகவும் பணி நியமிக் கப்படுவர். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார் அவர்.
பிரச்சாரத்தில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.ரமேஷ், திமுக மாநில விவசாயத் தொழிலாளரணிச் செயலர் சுப்பிரமணியன், கயத்தாறு ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், கழுகுமலை திமுக நகரச் செயலர் கிருஷ்ணக்குமார்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.