சாத்தான்குளம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, ஜல்சக்தி அபியான் திட்ட மாவட்ட பார்வையாளர் பிரனவ்குல்லார் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
சாத்தான்குளம் ஒன்றியம் கொம்டிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட படுக்கப்பத்துக்கு செல்லும் வரத்து கால்வாயில்
ரூ. 1.20 லட்சத்தில் அமைக்கப்பட்டும் வரும் தடுப்பணை, அதே ஊராட்சிக்குள்பட்ட கொம்மடிக்கோட்டை அங்கன்வாடி மையம், குடிநீர் மேல்நிலைத்தொட்டி அருகில் ரூ. 20 லட்சத்தில் பொது உறிஞ்சிக்குழி, விவசாயிகள் பங்களிப்புடன் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட நரையன்குடியிருப்பில் குளம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஜல்சக்தி அபியான் திட்ட மாவட்ட பார்வையாளர் பிரனவ்குல்லார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்னர். அப்போது பணிகளை விரைந்து முடிப்பதுடன், தரமானதாக அமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
மேலும், நரையன்குடியிருப்பு பகுதியில் குளம் அமைக்கும் பணியை பார்வையிடும் போது; குளத்துக்கு தண்ணீர் வரும் வகையில் வரத்துகால்வாய் அமைக்க வேண்டும். அதற்கு நிலம் தருவதாக விவசாயிகள் ஆட்சியரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், விவசாயிகளிடம் நிலத்தை அரசுக்கு எழுதி வாங்கி, கால்வாய் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆட்சியர். பின்னர் ஆட்சியர் மற்றும் மாவட்ட பார்வையாளர் ஆகியோர் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மெஞ்ஞானபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மழை நீர் சேமிக்கும் அமைப்பினை பார்வையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது; தமிழக முதல்வரின் மழைநீர் சேமிக்கும் திட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என தெரிவித்ததின் . அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை நீர் சேமிக்கும் திட்டம் மற்றும் நீர் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம் விவசாயிகளின் பங்களிப்புடன் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் கோரம்பள்ளம், தாமிரவருணி மற்றும் வைப்பாறு ஆகிய கோட்டங்களின் கீழ் உள்ள 37 கண்மாய்கள் சுமார் ரூ. 14 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் பெரிய ஏரிகள், கண்மாய்கள் தூர்வாரும் பணிகளும், ஜல்சக்தி அபியான் மற்றும் ஊருக்கு நூறு கை திட்டத்தில் சிறுகுளம், குட்டைகள், ஊரணிகள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 88 பாசன குளங்களை தலா ரூ. 5 லட்சம் மதிப்பிலும், 422 சிறு குளம் மற்றும் குட்டைகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலும் என சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழைக்காலங்களுக்கு முன்பாக அனைத்து குளங்கள், குட்டைகள், ஊரணிகளை தூர்வாரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் நிலையங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
ஆய்வின் போது, மாவட்ட திட்ட அலுவலர் தனபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர், ஊராட்சிகளின் செயற்பொறியாளர் சங்கரஜோதி, உதவிச் பொறியாளர் கெளதமன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொ) விஜயகுமார், சாத்தான்குளம் ஒன்றிய தொகுதி அலுவலர் ஜான்கென்னடி, சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞானராஜ், துணை வட்டாட்சியர் சுவாமிநாதன், ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாத்தான்குளம் செல்வி, உடன்குடி பானு உள்பட பலர் உடன் சென்றனர்.