தூத்துக்குடியில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் தொடக்கம்
தூத்துக்குடியில் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் ஞாயிற்றுக் கிழமை தொடங்கப்பட்டது.
தூத்துக்குடியில் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் ஞாயிற்றுக் கிழமை தொடங்கப்பட்டது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் சிறு, குறு நில உடைமையாளர்களுக்கு முதல் தவணை நிதி உதவி பெறுவதற்கான சான்று வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி 134 விவசாயிகளுக்கு முதல் தவணைக்குரிய நிதி உதவி பெறுவதற்கான சான்றினை வழங்கினார்.
அப்போது, அவர் பேசியது: இத்திட்டத்தில் பயன்பெற இதுவரை பதிவு செய்யாமல் விடுபட்ட சிறு, குறு விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் பிப். 27 ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு தலா ரூ.1,250 மானியத்தில் தார் பாய்,
விவசாயி ஒருவருக்கு தென்னங்கன்று, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் (எண்ணெய் வித்து) ஒரு விவசாயிக்கு இலவச எள் மினிட், ஒரு விவசாயிக்கு இலவச கடலை மினிட் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.
வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியை ஆட்சியர், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர். இதில், வேளாண் இணைஇயக்குநர் மகாதேவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) பாலசுப்பிரமணியன், துணைஇயக்குநர் (தோட்டக்கலைத்துறை) எல்.சரஸ்வதி, உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணைஇயக்குநர் ந. புருஷோத்தமன், வேளாண் உதவி இயக்குநர் மார்டின் ராணி, விவசாயிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.